அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

நன்றி! நன்றி!! நன்றி!!! 1/30/2009

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எதிர் கொள்வதில் தான் நம் எதிர்காலமே அடங்கியிருக்கிற்து. அமெரிக்காவில் இருப்போருக்கு இருக்கும் மிகப்பெரிய வியாதி/பிரச்னை தனிமை. தனிமைனா சும்மா அம்மா அப்பாகிட்ட கோவிச்சு போய் கோயில் வாசல்ல/குழாயடியில/கிணத்து மேட்டுல உக்காந்து போற வாற பொண்ணுங்கள சைட் அடிக்கிற தனிமை இல்ல. அத்துவான காட்டுக்குள்ள அர்த்த ராத்திரியில எங்கே இருக்கோம்னு தெரியாம, எங்கே போறோம்னும் தெரியாம மண்ட காய்ஞ்சு மயிரு பூத்து போற ஒரு தனிமை.

”உன்னை சரண்டைந்தேன்” என்ற படத்துல ஒரு டையலாக் வரும். “எங்க ஊர்ல ஒரு நாயை அடிச்சா கூட ஊரே திரண்டு வந்து, என்னானு கேக்கும், ஆனா நகரத்துல ஒரு மனுசனை அடிச்சா, ஒரு நாய் கூட என்னானு கேக்காது”. அதே மாதிரி தான், ஹாஹா என ஆர்பரித்து சிரித்தாலும், ஓ..வென கதறி அழுதாலும் ஒரு பய கூட என்னானு கேக்க மாட்டான். தனியா தான் இருக்கனும். தனியா தான் சிரிக்கனும் லூஸ் மாதிரி.

அதுக்கு தான் இங்க இருக்குற மக்க, லேப் டாப் ஒன்ன மடியில ஒக்காத்தி வச்சுகிட்டு அது கூட பேசி/சிரிச்சு/அழுது/பொலம்பி பொழப்ப ஓட்டிகிட்டு இருப்பானுவ. அப்படி தான் நானும் நாட்களை கடத்தினேன். புதுசா வரும் தமிழ் சினிமாவை எவ்வ்ளவு மொக்கையா இருந்தாலும் பாத்துட்டு, நண்பனுக்கும் போன் போட்டு பட நேரத்தை அதிகமா படத்தை பத்தி ஒரு மொக்க போட்டு ( அவனும் பாத்துட்டு திரும்ப ஒரு ரிவியூ பண்ணுவான் ) நேரத்தை ஒப்பேத்தினோம். 

நம்மளுக்கு இந்த படம் பாக்குறத தவிர வேறெந்த நல்ல பழக்கமும் கிடையாதா.. என்னை போல ஆளுகளுக்கு நேரத்தை கடத்துறது ரொம்ப கஷ்டம். GMAIL. YAHOO,  REDIFF , OFFICE MAIL, DINAMALAR, CNN, TAMILMANAM என எல்லாத்துக்கும் சராசரியா 100க்கு மேல ஹிட் கவுண்ட் கொடுத்து எதோ என்னாலான உதவிய செஞ்சுகிட்டு இருந்தேன். அதுவும் ரொம்ப நாளுக்கு தாக்கு பிடிக்கல.. அப்ப நண்பர் ஒருவரின் மூலமா உதித்தது தான் லைப்ரேரி விஜயாம்..

பொழுது போக்குக்காக படம் பாக்க ஆரம்பிச்சு, படம் பார்க்க நேரமில்லாத அளவுக்கு படங்களை தேடிப் பார்த்தேன். அதற்கு அடுத்த படியாக தான், பார்த்த படங்களில் பிடித்ததை பதிவாகவும் போட ஆரம்பித்தேன். இப்போ புத்தகமும் படிக்க ஆரம்பிச்சாச்சு. அடிக்கடி என்னை லைப்ரேரியில் பார்ப்பதால் லைப்ரேரியன் லிண்டா நல்ல பழக்கமானார். ஏற்கனவே பதிவில் சொன்ன மாதிரி படங்களை எனக்கு தேடி தந்து உதவினார். 

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் மதிய உணவின் போது சந்திக்கும் போது வழக்கம் போல வழ வழ என பல விசயங்களை பற்றி பேசினேன். அதில் நான் பேசிய முக்கிய விசயங்கள் The World is Flat – புத்தகம் பற்றியது மற்றொன்று எனது நீண்ட நாள் கனவான “விவசாயம்” பற்றியது. 

இது நடந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது, இன்று ( வெள்ளிகிழமை ) அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஒரு பார்சல் அமேசானிலிருந்து வந்திருந்தது. பிரித்து பார்த்தால் இரண்டு புத்தகங்கள் ஒன்று நான் பேசிய அதே புத்தகம் மற்றொன்று விவசாயத்தை பற்றிய Hot, Flat and Crowded.  Its surprise gift from Lynda. ஆச்சர்யபட்டு போனேன், நான் பேசியதை உன்னிப்பாக கவனித்திருக்க வேண்டும் அவர். அவருக்கு எனது நன்றிகள் பல. Thanks Lynda
இதே போல எனக்கு எல்லாவித்திலும் உறுதுணையாக இருக்கும் இன்னொரு தோழியையும் இச்சமயத்தில் நினைவு கூர்கிறேன். நன்றி.



நிகழ் கதைகள்…3 கடையை எப்போ தொறப்பீங்க? 1/29/2009


முழுபோதையில் சரிகிற வேட்டியை இழுத்து பிடித்து ஒரு மூலையை பல்லில் கடித்து, இன்னொரு மூலை வேட்டியை தெரு கூட்ட விட்டு தெனாவெட்டா தெருவலம் வர்றான் நம்ம (டுபுக்கு) ராமன்.

தரைக்கு கீழே புறாக்கூண்டு போல இருக்கும் பலசரக்கு கடையில் தூக்கணாங்குருவி கூடுகள் போல் தொங்கி கொண்டிருந்த தீன்பண்ட பைகளை விலக்கி, “(யோக)வள்ளி பீடி குடு”.

“என்ன பீடிடா?” வெரசா வெரட்டி விடும் நோக்கில் வள்ளி.

“தெனமும் வாங்குறது தான்.. என்னமோ புதுசா கேக்குறா”

வேண்டா வெறுப்புடன் இரண்டு ”ஐந்து பூ மார்க்”  பீடியை எடுத்து திணிக்கிறாள் (யோக)வள்ளி

ஆசிர்வாதம் குடுக்க வரும் யானை, பிள்ளையை நுகர வருவது போல பக்க வந்து ”என்னாது இது?“ – (டுபுக்கு) ராமன்.

சுவாச அறை உருவாக்கியா கீட்டோனும் ராமன் உருவாக்கிய CO2 வும் ஒன்று சேர்ந்து தாக்க, மூச்சடைத்து விம்மி விழி பிதுங்கி “நீ கேட்டது தாண்டா, பூ மார்க் பீடி” மூச்சுகாற்றை விரட்டியடித்தபடி (யோக)வள்ளி.

“அது தான் ப்ப்பூ இருக்குல.. எங்களுக்கென்ன கண்ணு அவிஞ்சா கிடக்கு”

பாசம் கலந்த வெறுப்புடன் ”அவிஞ்சா தான்டா நல்ல இருக்கும் இந்த ஊரும் நாங்களும்”  

“என்னாங்க முனுமுனுப்பு?.. ரெண்ட எடுத்து நீட்டுற.. பாக்கெட்டோட குடுப்பியா”

ஒரு கையால் சட்டை காலரை தூக்கிவிட்டு, பல்லில் கடித்த வேட்டி முனையை கையில் பிடித்து ஒரு காலை மேலே தூக்கி, படி மீது வைத்து படம் காட்ட, வெறுத்துபோன (யோக)வள்ளி, ”இந்தா போய்த் தொல.. மொதல்ல இடத்த காலி பண்ணு.”  

”இத மொதல்லேயெ செஞ்சிருக்கலாம்ல” வெற்றிக் களிப்புடன் ”வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்.. ஓய்..ஹோய்..”

மறுநாள் காலையில் கடைக்கெதிரான திண்ணையில் மழையில் நனஞ்ச கோழியாக (டுபுக்கு) ராமனும்.. சினங்கொண்ட சிறுத்தையாக (யோக)வள்ளி விழிகளாலே விசாரித்துக் கொண்டனர்.

என்ன விசாரிச்சுகிட்டாங்கனு சொல்லவும் வேணுமா? தலைப்பை ஒருமுறை படிங்க (அப்படி தான் ஆரம்பிச்சான் நம்ம (டுபுக்கு) ராமன்).

பி.கு : கதையின் அடிநாதம் ( அப்டி ஒன்னு இருக்கா என்ன?) பலருக்கு சில சந்தேகங்களை எழுப்பியதால், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ).

மயங்குகிறான் ஒரு மருத்துவன் 1/27/2009


மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கடற்கரை கிராம மக்கள், எட்டு ஆண்டுகளாக அரசாங்க நலத்திட்ட உதவியை எதிர்பார்த்து வாழவேண்டிய இழிநிலைக்கு தள்ளபடும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமா கிராமத்தை விட்டு வெளியேறி, நகரத்திற்கு நகர்கின்றனர். இந்த இழிநிலையிலிருந்து மீள அவர்களுக்குத் தேவை ஒரு தொழிற்சாலை வசதி. ஆனால் அதற்கு தடையாக இருப்பது லஞ்சம் மற்றும் ஒரு மருத்துவரின் ஐந்து சேவை கடிதம். இந்த இரண்டு பிரச்னையையும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை ததும்ப தழும்ப விளக்குவது தான் இந்த Seducing Dr. Lewis.

ஒரு தண்டனையிலிருந்து தப்பிக்க டாக்டர் லெவிஸ் இந்த கிராமத்தில் ஒரு மாத்த்திற்கு பணி செய்ய வேண்டா வெறுப்புடன் ஒத்து கொள்கிறார், அவரை அடுத்த ஐந்து வருடத்திற்கும் பணி செய்யவைக்க ஒட்டு மொத்த கிராமமும் செய்யும் செயல்கள் அனைத்தும் நகைச்சுவை சரவெடி.

டாக்டர் லெவிஸ்க்கு கிரிக்கெட்டின் மீது அலாதிப் பிரியம் என் அறிந்து கொண்டு, கிரிக்கெட்டை தெரிந்து கொள்ள இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் ஹிந்தி லகானை நினைவுபடுத்துகிறது. லகான் இதற்கு முன்னே வெளிவந்து விட்டது குறிப்பிட்த்தக்க் வேண்டிய ஒரு விசயம். 

உதாரணத்துக்கு ”விக்கெட் கீப்பர் ஸ்டெம்ப்க்கும் பேட்ஸ்மேனுக்கும் இடையே இருந்து பந்தை பிடித்து கொண்டிருப்பார்”,  “ஒட்டு மொத்தமாக கிரவுண்டில் ஒரு முப்பது நாப்பது பேர் இருப்பர்”  சில வினாடியே இடம்பெறும் இந்த மாதிரி காட்சிகள் அதிகம். தூரத்தில் இருந்து பார்த்து விளையாட்டை ரசிக்கும் டாக்டர் லெவிஸ் இவர்களை நோக்கி வர,  குட்டு வெளிப்பட்டு விடாமலிருக்க இவர்கள் எடுக்கும் முடிவு செம கிச்சு..கிச்சு.

டாக்டரின் நடவடிக்கையை அறிந்து அவரை வலையில் விழ வைக்க ரெண்டு பெருசுகள்(பெண்கள்) அவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்கிறார்கள். தனது காதலியுடன் பேசும் “சங்கேத” வார்த்தைகள் புரியாமல் மொத்த கிராமமும் ஒருவருக்கொருவர் விளக்கம் கேட்டு திரிவது அக்மார்க் “அப்பாவிதனமான” காமெடி.

டாக்டரை தவிர்த்து குறிப்பிடப்பட வேண்டிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் யுவான், ஜெர்மய்ன், ஹென்றி. இதில் ஹென்றி மட்டுமே நடுத்தர வயதுடையவர் – வங்கி அதிகாரியாக வருகிறார். மற்ற இருவரும் முதியவர்கள் - ஜெர்மய்ன் கதையின் நாயகன், அவரின் நண்பன் யுவான். 

இந்த கிழம் ரெண்டும் பண்ணும் சேட்டை சொல்லி மாளாது, உதாரணத்துக்கு யுவான் தன் மனைவியுடன் குடும்ப சகிதமா படுத்திருக்க, ஜெர்மய்ன் குடிபோதையில் அவர்களுக்கிடையே படுத்து கொள்ள,  விழித்துக் கொள்ளும் யுவானின் மனைவி, ஜெர்மய்னிடம் நாசூக்காக, “உங்க மனைவி (Helene) சுகமா?” என்கிறார். 
”ம்ம். நல்ல சுகம்” என்கிறார்.
”கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, எங்க படுக்கயறையில என்ன் பண்ணிகிட்டு இருக்கீங்க?” என்று தெளிவாகவே கேட்க.
”கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்” என்று ரொம்ப சாதரணமாக சொல்கிறார்.
”வந்தே ரொம்ப நேரமாச்சே. நாங்க எல்லாம் இங்க படுத்துகிட்டு இருக்கோம் தெரியுதா..” என்கிறார்
உடனே நண்பர்/கணவர் இடையில் குறுக்கிட்டு, ”விடுமா எப்பாவாவது வர்ற ஆளு தானே” என்பார் பாக்கனுமே, அதிரடி தான். 

மக்கள் தொகையை கூட்டி காண்பிக்க எடுக்கும் முயற்சி, மீன் பிடிக்கும் போது டாக்டர் ஏமாறாமல் இருக்க வேறு வழியின்றி ஃப்ரோசன் மீனை சிக்கவைப்பது – அதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் வேறு தருவது, டாக்டருக்கு பிடித்தமான Jazz இசையையும் கிர்க்கெட்டையும் வேண்டா வெறுப்புடன் ரசிப்பது என படம் முழுவதும் நகைச்சுவை ரசம் பரவியிருக்கிறது.

பொதுவாக நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுகளை ரசிக்க தாய்மொழி படங்கள் தான் சிறந்தவை என்பது என் கருத்து. இது ஆங்கில படமல்ல பிரெஞ்சு மொழி படம், கண்டிப்பாக சப்-டைட்டில் உதவியோடு தான் முழு படத்தையும் பாத்தாக வேண்டிய கட்டாயம். இருப்பினும் ஒவ்வொரு பிரேமிலும் மிதமிஞ்சி கிடக்கும் நகைச்சுவை ஒவ்வொன்றும், உணர்ந்து வெகுவாக ரசிக்கும்படி இருந்தது. பொத்து கொண்டு வரும் சிரிப்பை அடக்கமுடியாமல் படத்தை நிறுத்திவிட்டு சிரித்து விட்டு மறுபடியும் தொடர்ந்தேன். 

97ல் பள்ளியில் படிக்கும்போது “உள்ளத்தை அள்ளித்தா” படத்தை அலங்காநல்லூர் அஜந்தா திரையரங்கில் ரெண்டாம் ஆட்டம் பாத்துவிட்டு நட்ட நடு ராத்திரியில் ஒவ்வொரு காட்சியையும் – “என்ன ஐயாயிரம்?.. ஐயாயிரம்” , “நீயே ஒரு டிக்கெட்டு உனக்கெதுக்கு டிக்கெட்டு”, ” என்னது 400 ரூபாயா? டெம்போ எல்லாம் வச்சு கட்த்திய்ருக்கோம்யா, கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கய்யா.”, “மணிவண்ணன் கட்டையால் அடிபட்டு கீழே விழும்போது ”மம்மீ” என்று கத்தி மயக்கம் போட்டு விழுவது” என் அனைத்தையும் அசை போட்டுகொண்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டே வந்தோம். அதே மாதிரியான் ஒரு நல்ல அனுபவத்தை இந்த படம் தந்தது.

வெளிபடையாய் இரேன் பா.. 1/25/2009


தோற்றத்தை வைத்து எப்படி ஒருத்தரை எடை போடக் கூடாதோ அதே போல பேச்சை (குறிப்பாக கெட்ட வார்த்தையுடன்) வைத்தும் எடை போட கூடாது என்பது என் கருத்து.

என்னோட நண்பன், செம ஜாலி பேர்வழி. அவனுக்கு கூசாம பேச்சுல கெட்ட வார்த்தைகள் வந்து விளையாடும். நாங்க போடாத ஆட்டம் கிடையாது, அவன் தியேட்டர்ல ஆளுக்கு டிக்கட் வாங்குனா, நான் சைக்கிளுக்கு டோக்கன் வாங்கிட்டு இருப்பேன். நல்ல படமா, யாரு நடிச்சது, எந்த தியேட்டரு, காலையா, மாலையா என எந்த கேள்வியும் இல்லாம ஒரு தியேட்டர் விடாம, ஒரு படம் விடாம பாத்துடுவோம். 

கடைசியாய் நாங்க ரெண்டு பேரும் பாத்தது “தூள்” என் நண்பன் பேரும் படத்தில் கதாநாயகன் பேரும் ஒன்னு. மதுரை சிந்தாமணியில் தான் பாத்தோம், சிறப்பு விருந்தினரா விக்ரம், தரணி, “அப்பத்தா” பரவை முனியம்மா வந்திருந்தனர். ரீமா சென், ஜோதிகாவை விட , பரவை முனியம்மாவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் நாங்க குடுத்த வரவேற்பில் தியேட்டரே அதிர்ந்தது. அது தான் நாங்க ரெண்டு பேரும் சேந்து பாத்த கடேசி படம், முதல் படம் என்னனு எனக்கு ஞாபகமில்லை. அவனுக்கும் ஞாபகமிருக்காது.

என் வீட்டுல என் அம்மா ரொம்ப கண்டிப்பு. வெளியில போய் என்ன ஆட்டம் வேணும்னாலும் போட்டுக்கோ. ”ஆனா உன்ன பத்தின எந்த (படிப்பு உட்பட) பிரச்னையும் வீட்டுக்கு வரக் கூடாது”. ஒன்றிரண்டு முறை கம்ப்ளைண்ட் வந்து என் நிலைமை தர்ஸ்ஸாகி, நான் டர்ர்ரானது வேறு விசயம். அது ஒன்னுல தான் அவனுக்கும் எனக்கும் ஒரு சிறு வித்தியாசம். 

மத்தபடி, நாங்க ”திட்ட” பயன்படுத்தாத வார்த்தைகளே கிடையாது, கிராமத்தில பிறந்து வளர்ந்தவங்களுக்கு தெரியும், ”ஸ்ரீவள்ளி திருமண” நாடகத்தில் “பபூன் மற்றும் டான்ஸ்” கேரக்டர்கள் பேசும் வசனம் எப்படி பட்டது என்று. வருடத்திற்கு கிட்ட தட்ட பத்து பன்னிரண்டு நாடகங்கள் பாக்குற எங்களுக்கு அதனோட பாதிப்பு ரொம்பவே இருக்கும்.

இன்னைக்கு நான் வாங்குற சம்பளத்துல ஒரு அஞ்சோ பத்தோ சதவீதத்தை வீட்டுக்குக் குடுத்துட்டு நானும் என் அப்பன் ஆத்தாள பாத்துக்குறேனு சொல்ற நான் எங்கே? தன் குடும்பத்துக்காக தனது திருமண பந்தம் உள்ளிட்ட அனைத்திலும் பெற்றோருக்காக ( அதெல்லாம் ரொம்ப பெரிய விசயம் ) விட்டுக் கொடுத்து அவர்களை கண்ணும் கருத்துமாய் கூடவே இருந்து ( வேறு வழியில்லாமல் இல்ல அவனுக்கு) பார்த்துக் கொள்ளும் அவன் எங்கே? வாயைத்திறந்தால் சும்மா அருவி மாதிரி கொட்டும் கெட்ட வார்த்தை, அதனால அவன் கெட்டவனா? சும்மா வெளி வேசம் போட்டு பூசி மொழுகி (Sugar coated words ) பேசுபவர்கள் நல்லவர்களா?


தமிழ் சினிமா பார்ப்பவர்கள் யாரும் ”சில்க்” என்றொரு வார்த்தையை கடக்காமல் சென்றிருக்க முடியாது. அவரது இயற்பெயர் விஜயலட்சுமி ( இது பல பேருக்கு தெரியாது ). இன்றும் இவரது இடத்தை தனியாளாக யாரும் பிடிக்க முடியவில்லை. அவர் கொலை செய்யபட்டதை (கண்டிப்பாக தற்கொலை செய்திருக்க மாட்டார், இது அவர் மீது நான் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை )கேட்டு வருத்தப்பட்ட ரசிகர்களில் நானும் ஒருவன். 


மதுரை வக்ஃபோடு கல்லூரியில் இவரது மரணத்தை முன்னிட்டு விடுமுறை விட சொல்லி எனது (பள்ளி) சீனியர் மாணவர்கள் அட்டகாசம் செய்த்தாக கேள்வி. அவரது கதாபாத்திரங்கள் அனைத்துமே “போதை” மாதுவாகத்தான் இருக்கும். இதனால் அவர் கெட்டவரா? இன்றுள்ள முண்ணனி நடிகைகளை விட எந்தவித்திலும் தாழ்ந்தவரல்ல என்பது மிகைப்படுத்தபடாத உண்மை.

இதற்கு மற்றுமொரு ”வாழும் உதாரணம்” ஷகிலா. இவர் நடித்த மலையாள படம் எதுவும் நான் பார்த்த்தில்லை ( சொன்னா நம்புங்கப்பா ). இவர் நடித்த கதாபாத்திரங்களை வைத்து இவர் கெட்டவர் என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் அதை விட கூறுகெட்டதனம் வேறு என்ன இருக்க முடியும்.

எழுத்தாளர் சுஜாதா, “கெட்ட வார்த்தைகளால் என்ன பயன், அதனை ஏன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்?” என்றதொரு கேள்விக்கு. ”உலகத்தில் கெட்ட வார்த்தைகள் மட்டும் இல்லையென்றால், கிரிமினல் ( அடிதை, கொலை) குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போயிருக்கும்” என்று பொருள்பட கூறியிருந்தார். எவ்வளவு பெரிய உண்மை இது.

தனக்கு பிடிக்காத ஒருசெயலை/ஒருத்தரை வாய்விட்டு திட்டிச்/கொட்டிச் செல்லும் ஒருவன் அடுத்த சில வினாடிகளில் அதை மறந்து விடுகிறான், மனதிலிருந்து இறக்கிவிடுகிறான். அப்படி செய்ய முடியாத அப்பாவிகள் உள்ளுக்குள்ளே குமுறி பல்வேறு நோயின் வாயிலாக வெளிக் கொணர்கிறார்கள். 

வெளிபடையாய் இரு, இருக்கவிடு. என்ன குடியா மூழ்கப் போகுது.  நீ... நீயாயிரு மற்றவரை புண்படுத்தாமல். 


இதே கருத்தை வலியுருத்தி, Anger Management என்றொரு படம் வந்துள்ளது. கோபத்தை கட்டுபடுத்தி ஒருவித கூச்சத்தோடு வாழும் தனது காதலனை(Adam Sandler) ஒரு மருத்துவரின் (Jack Nicholson)உதவியோடு குணப்படுத்தும் ஒரு காதலியின் (Marisa Tomei) கதை, நல்ல நகைச்சுவை படம். Marisa வின் My Cousin Vinny  படம் பார்த்துவிட்டு (இந்த படத்திற்காக இவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.) அவரின் நகைச்சுவைக்காக நான் பார்த்தது இந்த படம். ஆனால் இப்ப்டத்தில் இவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் போனது வருத்தமே.

வெளிப்படையாக பேசுவதால் சில தொல்லைகளை அனுபவித்து வரும் என் தோழிக்காக இந்த பதிவு

Love Marriage 1/21/2009


புத்தாண்டுக்கு தீர்மானம் எடுத்தாச்சு, மாசத்துக்கு ஒரு புத்தகமாவது படிக்கணும் என்று, அதன்படியே கஷ்டப்பட்டு ஒரு புத்தகமும் படிச்சு முடிச்சாச்சு. அதைப் பத்தின பதிவு தான் இது. நான் படித்த புதினம் "Love Marriage". 

திருமணம் என்பது இருமனம் இணைவது மட்டுமல்ல இரு குடும்பங்களும் (பரம்பரையே) இணைவது என்பதை மிக எளிமையான நடையில் விளக்குகிறார் ஆசிரியர் கனேஷனந்தன். இது இவருக்கு அறிமுக நாவல். பாராட்டுக்கள்.

ஒவ்வொரு பாகத்தின் ஆரம்பத்திலும் “ஒரு திருக்குறளை” பயன்படுத்தியதற்காக சிறப்பு பாராட்டுக்கள்.

1983 கருப்பு ஜூலை யில் புலம் பெயர்ந்த இலங்கை தம்பதியர்க்கு பிறந்த யாழினி தனது குடும்ப உறவுகளையும் திருமணம் போன்ற வைபவங்களையும், இலங்கையில் நிலவும் அரசியல்/போர் சூழலையும் இணைத்து தனது பார்வையில் விவரிக்கிறார் இப்புதினத்தில்.

சமீபத்தில் இணைந்த கலைஞர் குடும்ப பிரச்னையின் போது, செல்வம் யாரு? தயாநிதி மாறனுக்கும் கனி மொழிக்கு என்ன உறவு? செல்வியும் முரசொலி செல்வமும் உடன்பிறப்பா? இப்படி பல கேள்வி எழும், இதுக்கெல்லாம் பதில் சொல்லும் வண்ணம் சில நாட்களுக்கு முன்னே அவர்களின் குடும்ப வரைபட அஞ்சுகத்தாயில் ஆரம்பித்து கனிமொழி பையன் ஆதித்யன் வரைக்கும் மொத்த குடும்பத்தின் வரைபடம் வெளிவந்து தமிழக மக்களுக்கு (எனக்கும் தான்) பெரும் குழப்பத்தை நீக்கியது. 

அதே போல இந்த புதினத்தில் யாழினியின் மொத்த குடும்ப வரைபடத்தையும் முதல் பக்கத்தில் கொடுத்திருந்தனர். தொடர்ந்து படிக்காமல், இடைவெளி (நாட்கணக்கில்) விட்டு படிக்கும் என்னை போன்ற மக்களுக்கு முதல் பக்க வரைபடம், பெயர்களையும் அவர்களின் உற்வுகளையும் உடனடியாக அறிந்து/புரிந்து கொள்ள நல்ல உதவியா இருந்தது.

பல்வேறுபட்ட கதாபாத்திரங்கள், பெரும்பாலும் பெண்களே நிறைந்திருந்த இந்த புதினத்தில் எனக்கு பிடித்தது அந்த குமரன் ( யாழினியின் தாய்மாமன்) கதாபாத்திரமே. அவர் விடுதலை புலியில் இணைந்து, பின்பு சிகிச்சைக்காக கனடா வந்து சொந்த மண்ணில் மூச்சை விடாமல் அந்நிய மண்ணில் மூச்சைவிடுவதை நினைத்து வருந்தும் ஒரு ஆன்மா.

இலங்கையில் ஜெஃப்னா நகரில் தமிழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தையும் இப்புதினத்தில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

முரளியின்( யாழினியின் தந்தை ) உடல் நிலையை இலங்கையின் சூழ்நிலையோடு இணைத்து “To oncologist, everything was potential minefield to be analyzed and dissected, the body merely another bomb anticipating explosion”  என்று வெளிப்படுத்தியது கூர்மை.

அதே போல, டொரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குமரனை வரவேற்க காத்திருக்கும் யாழினி, ”In the terminals great cities of the world, we hold passports, but no countries” என்று புலம் பெயர்ந்த மக்களின் உணர்வை பொட்டில் அடித்தாற் போல் விவரித்திருந்தார்.

குறை என்று சொல்ல முடியாது, இதெல்லாம் இருந்திருந்தால் எனக்கு இன்னும் அதிகம் பிடித்திருக்கும். அவை:

ஒருவரின் தோற்றங்களை விவரிக்கும் போது அவரின் குணங்களையும் சேர்த்து விவரிக்கும் பாங்கு இடம் பெறவில்லை உதாரணத்திற்கு”SIDNEY SHELDON” தனது ARE YOU AFRAID OF THE DARK? எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். She was in her late twenties, an African-American with skin the color of melted honey and a face that was a photographer's dream. She had intelligent soft brown eyes, sensual full lips, lovely long legs, and a figure filled with erotic promise.

அடுத்து, நகைச்சுவை. நகைச்சுவை என்பது மருந்துக்கும் இப்புதினத்தில் இல்லை என்பது ஒரு வருத்தமான விசயம். 

வெளிநாட்டில் வாழும் தமிழ்/இந்திய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த புத்தகங்களை பரிந்துரைக்கலாம். திருமணம் மற்றும் சொந்த பந்த உறவு முறைகளை பற்றி அறிந்து/புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும்

இப்புத்தகத்தை வாங்க விரும்புவோர் இங்கே அழுத்தவும்.

இதனை தொடர்ந்து நான் தற்போது படித்துக் கொண்டிருப்பது “Rich Dad, Poor Dad”. 

அடுத்து படிக்கவிருப்பது The Word is flat,  Raising Your Emotional Intelligence. இது மாதிரியான/தொடர்பான வேறேதேனும் நல்ல புத்தகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.