அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

எங்கிருந்தாலும் வாழ்க! வாழ்க!! 2/12/2009

இன்னைக்கு இதமான காற்றுடன் கூடிய நல்ல வெதுவெதுப்பான வானிலை, ஃபெப்ரவரி மாதத்தில் இப்படி ஒரு நாள் கிடைப்பது மிக அரிது, ரசித்து கொண்டே அலுவலகம் வரும்போது மணி பத்தாகி அஞ்சு நிமிசம் ஆச்சு. பத்துமணிக்கு ஒரு மீட்டிங் வேற, லேட்டானது ஆச்சு, இன்னும் ஒரு அஞ்சு நிமிசத்துக்கு வந்திருக்கிற ஈ-மெயில் எல்லாத்தையும் கொஞ்சம் ஒரு பார்வை பாக்க, வழக்கத்திற்கு மாறாக சக அலுவலரிடமிருந்து ஒரு ஈ-மெயில், “Sorry…”  என்ற சப்ஜெக்ட் உடன். 

இந்த சக ஊழியர் ஒரு அமெரிக்கர், மனுசன் செம நக்கல்+ஜாலி பேர்வழி, ஜிம்மில் தான் பழக்கம். ஹாலிவுட் படங்களை பார்க்க ஆரம்பித்த புதிதில் படங்கள் பற்றி நிறைய விவாதிப்போம். எனக்கு படங்களை பற்றிய நிறைய கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துள்ளார். 

போன வாரம் Jillian Michaels  ( NBC தொலைக்காட்சியில் "The Biggest Loser" என்றொரு உடற்பயிற்சி நிகழ்ச்சியை நடத்தி வருபவர்)போஸ்டரை உடற்பயிற்சி வகுப்பில் மாட்டி வைத்து, செம கலாட்டா பண்ணிகிட்டிருந்தார். அந்த உரையாடலின் ஒரு பகுதி. 
You girls should look like this.
Remove that poster immediately.
Give me one good reason, Why should I remove that? She looks pretty. If you girls want, you can paste Arnold photo, I won’t mind.
We can’t give any explanation, Remove it.  That’s it. PERIOD. 
கடைசியில் பெண் தான் ஜெயித்தார் என்பதை சொல்லவும் வேணுமா? இந்த வார Entertainment Weekly’ல் கூட இவர் சம்பந்தபட்ட செய்தி வந்தது.அதை 
இன்னும் நான் படிக்கல.

பொண்ணுங்கள பத்தி பேசுனா, தான் இருக்கிற இடத்தை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பிச்சுடுவார். அவருக்கு கருப்பு கூந்தல், கருப்பு கண் விழி கொண்ட பெண்களை ரொம்ப பிடிக்குமாம்,அவரோட அப்பாவுக்கும் அதே டேஸ்டாம். எனக்கும் தான் என்பதை இங்கே தன்னடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன், Salma Hayek மற்றும் Penélope Cruz ரெண்ண்டு பேரும் அந்த லிஸ்டில் அடங்குவர்.

நான் விரும்பி ரசிக்கும் கதாநாயகிகளில் ஒருவரான Mandy Moore பற்றிய செய்தி அது. 24 வயசாகும் இவருக்கு திருமண நிச்சயம் ஆகிவிட்டதை பற்றியது தான் அந்த கடிதம். மனுசன் என்னை விட ரொம்ப வருத்தப்பட்டிருப்பார் போல, அதான் நானும் வருத்தபடனும்’னு வேண்டி விரும்பி எனக்கு அனுப்பி வச்சிருக்கார்.

தமிழில் மூனுஷாவும், ரீமாசென்னும் ஒரு சாயலில் ஒரே மாதிரி இருப்பர். மூனுஷாவுக்கு இயறகையிலே கர்லிங் ஹேர், கில்லி படத்தில் அப்படி போடு பாடலில் கருப்பு உடையில் சுருள் முடியுடன் ஆடும் காட்சியில் ரீமாசென்னை நினைவுபடுத்துவார். அதுபோல இவரும் Julia Stiles'ம் ஒரு சாயலில் ஒரே மாதிரியாக இருப்பதாக எனக்கு ஒரு தோன்றுகிறது. 

Saved! படத்தில் Jena முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மதபற்று கலந்த திமிரு கதாபாத்திரத்தில் நடித்த Mandy Moore கதாபாத்திரம் தான் எனக்கு பிடித்திருந்த்து. அதன் பிறகு The Princess Diaries, License to Wed, A Walk to remember (இதில் நடித்ததற்காக விருதுகளும் பெற்றுள்ளார்) என பார்த்து தள்ளியாச்சு. Because I said so படத்தில் சின்ன பையன் நாரசமா கேக்கும் கேள்விக்கு ஆச்சர்யம் கலந்த வெக்கத்துடன் விழிகளை அகல விரித்து “Whhhaaattttt...” என முழுங்கி கேக்கும் அந்த முக பாவம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது, மிக அருமையான காட்சி அது, ’யூடிஃப்’ல் பலமுறை தேடியும் கிடைக்கவில்லை. படமும் நல்ல காமெடி கலந்த காதல் படம் தான்.

செய்தி தொடர்பான சுட்டி இங்கே 

செய்தியை படிச்சுட்டு, ம்ம்ம்.. என பெருமூச்சு விட்டு, ”எனக்கில்லை எனக்கில்லை” என தருமி புலம்பின மாதிரி மனசுக்குள்ளே புலம்பி, “எங்கிருந்தாலும் வாழ்க.. வாழ்க” என மனசார வாழ்த்திட்டு, மீட்டிங்’க்கு போனேன் விரைவாக. பொலம்பிக்கிட்டு இருந்தாலும் பொழப்ப பாக்கணும்’ல, என்ன நாஞ்சொல்றது?


டும்...டும்...டும்... 2/11/2009


அப்பா - ஒரு தற்பெருமை பிடிச்சவர். தற்பெருமைனா.. உங்க வீட்டு, எங்க வீட்டு தற்பெருமை இல்ல. உலக மகா தற்பெருமை. சில பெருசுக வாயைத் திறந்தா ”நாங்க எல்லாம் அந்த காலத்துல” என் ஆரம்பிச்சு வூடு கட்டி அடிக்கும், அதே போல, மாட்டுற எல்லார் கிட்டேயும் “கிரேக்க மொழியை பற்றியும் கிரேக்க கலாச்சாரத்தை பற்றியும்” கிறுகிறுக்க வைக்கிற அளவுக்கு அடிக்கடி சொல்லி கிச்சு கிச்சு மூட்டுகிறார். தனது வாரிசுகளுக்கு கிரேக்க குடும்பத்தில் தான் சம்பந்தம் பண்ணுவேன் என்று ரெண்டு காலில் நிற்பவர்.

குடும்பம் - பாரம்பரியமிக்க கிரேக்க குடும்பம். கதாநாயகிக்கு ஒரு அம்மா ( ரொம்ப அதிசயம் பாரு), ஒரு தங்கை, ஒரு தம்பி. 1986ல் விஜயகாந்த் நடிக்க இளையராஜா இசையில் வெளிவந்த தழுவாத கைகள் படத்தில் “குடும்பத்தை உருவாக்க சொன்னா, ஒரு கிராமத்தை உருவாக்கி தந்தார் எங்கப்பா” என்ற பாடலை தங்களுக்காக பாடியதை போல ஒரு கிராமத்தை உருவாக்கி வைத்திருக்கும் உறவின கூட்டம். 

கதாநாயகி - முப்பதை தாண்டிய, நல்ல சதைப்பற்றுள்ள, பார்வைக்கு கண்ணாடி துணை தேடும், ”Mid-life Crisis"ல் அடி எடுத்து வைக்கவுள்ள ஒரு பேரிளம்பெண். 

கதாநாயகன் - ஆசிரியர் வேலைபாக்கும் அமெரிக்கர். சொந்தமாக ஒரே அப்பா, அம்மா. டைனிங் டேபிலில் இருக்கும் சாப்பாட்டை கூட “எச்சூஸ் மீ” சொல்லி, பரிமாறும் Privacy குடும்பம். 

காதல் - கதாநாயகிக்கு பையன் மேல் முதல் பார்வையில் காதல்,  இப்போ இருக்கிற மாதிரியே இருந்தா பாட்டி ஆனாலும் ”கல்யாணம்” என்ற வார்த்தையை கூட கேக்க முடியாது என்பதை உணர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறார்.  தோற்ற மாற்றத்திற்கு பிறகு இவளை பார்க்கும் பையனும் ஒரே பார்வையில் விழுந்துடுறான். காதல் விசயத்தில் ரொம்ப சிரத்தை எடுத்துக்கல இயக்குநர், காமெடியில் கலக்கி எடுத்துள்ளனர்.
கதை - மேலே சொன்ன விசயங்களை வச்சு யூகிச்சு இருப்பீங்க.. அந்த பையனும் பொண்ணுக்கும் எப்படி கல்யாணம் நடக்குதுங்கிறது தான் கதை. குடும்ப சூழல் தெரிஞ்சு எங்காவது ஓடிபோலாம என நாயகி கேக்க, அப்படி எதுவும் பண்ண வேணாம் உங்க குடும்ப முழு சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்க்லாம் என அறிவுறுத்தி, அவர்களின் விருப்பபடியே மதம் மாறி, வீட்டோட மாப்பிள்ளையாகிறார் அந்த பையன்.

கதைகளம் - "Wind City" சிகாகோ.

அழிச்சாட்டியம்/அட்டூழியம்/கலாய்ச்சல்
பொண்ணோட தம்பி, நாயகனுக்கு கிரேக்க மொழியில் கெட்ட வார்த்தையை சொல்லி கொடுத்து மாட்டிவிடுதல், வீம்பு பிடிக்கும் அப்பாவை அவர் வழியிலேயே போய் மடக்குதல்,  ஆம்பள குடும்பத்துக்கு”தலை”யா இருக்கலாம், ஆனா நம்ம தான் கழுத்து, நம்ம இல்லாம அவுகனால் ஒன்னும் ”ஆட்ட” முடியாது என குடும்பதலைவி விடும் ரவுசு, பெண்பார்க்க வரும் மாப்பிள்ளை கூட்டம், பல நாள்பட்ட சோஃபாவின் பாலித்தீன் கவரை கூட பிரிக்காமலிருப்பது, சீக்கு வந்த கோழி ரெக்கைய விரிக்கிற மாதிரி கையை பக்கவாட்டில் நீட்டி, ஆட்டி நடனமாடும் ஒரு கூட்டம். ரெண்டு பேர விருந்துக்கு வரச்சொல்லிட்டு ஒரு ஊரே வூடு கட்டி வெட்டுதல் என அதகளம் பண்ணியிருக்கார்கள் படமுழுதும்.

மாமியாருக்கும் மருமகனும் இடையே ஒரு உரையாடல்:
உங்களுக்கு பசிக்குதா?
இல்ல..
சரி உங்களுக்கு சாப்பிட எதாவது யார் பண்றேன்.

நம்மூரில் திருஷ்டி கழிச்சுட்டு, திருஷ்டி மேல தான் துப்புவார்கள், ஆனா இங்க மனுசன் மேலே துப்புறாங்க.

இந்த நகைச்சுவை படத்திலும் ஒரு செம ஷார்ப் வசனம் “Don't Let your past dictate who you are. But let it be part of who you will become

பி.கு: இந்த படத்தை பரிந்துரைத்த GILS'க்கு எனது நன்றிகள் பல.

ஜெனீஃபர்...மாயா...நயன்தாரா... 2/09/2009

நேத்து தானே ஒரு பதிவு போட்டோம் இன்னும் ரெண்டு மூனு நாள் கழிச்சு இன்னொரு பதிவு போடலாம் என இருந்தேன். ஆனா நான் பாத்த ஒரு பாட்டு அந்த கொள்கையை ( முதல்ல இந்த வார்த்தைய தடை பண்ணனும், ”புரட்சி”, ”தளபதி” மாதிரி ”கொள்கை”யையும் பாடாய் படுத்துறானுக ) உடைத்தெரிந்து விட்டது.  அது என்ன பாட்டு என்ன என்பதை அப்புறம் பாப்போம், அதுக்கு முன்னே ஒரு சின்ன கொசுவத்தி சுருள்.

பொதுவா என்னுடைய ஆசிரியைகள் மீது எனக்கு ஒரு அபரிமிதமான ஒரு அன்பு உண்டு. நானும் ஏதோ கொஞ்சம் நல்லா படிச்சதுனால, அவங்களும் என் மேல பாசமா இருந்தாங்க, இது கல்லூரி வரையும் தொடர்ந்தது. பிடிக்காத சில ஆசிரியைகளும் இருந்தாங்க, நல்ல விசயத்தை பேசும் போது சில “சின்ன” விசயங்களை மறப்பது நல்லது தானே. ஸோ இக்னோர் தெம்.

அப்படிபட்ட ஆசிரியகளுக்கு ”ஒரு குடை, ஒரு கூலிங்கிளாஸ், ஒரு நல்ல பாலிஸ்டர் புடவை” என ஒரு தனிஅடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தார் பாரதிராஜா, நம்ம ஜெனீபர் டீச்சர் மூலமாக, ரேகாவும் கனகச்சிதமாக செய்திருந்தார். இன்னைக்கும் ”அடி ஆத்தாடீடீ......” என ஜானகி பாடுவதை கேட்டால் மனம் ஒருபக்கம் ஒருக்களித்து கவனிக்க ஆரம்பித்துவிடும், அவ்வள்வு ஒர் ஈர்ப்பு. இந்த படத்தின் மூலம் ஒரு முழு நேர வில்லனை முதன்முறையாக கதாநாயகனாக்கினார் பாரதிராஜா. இவ்வளவு இருந்தும் எனக்கு பிடித்தது அந்த ஒருதலை காதலை, உருகி உருகி காதலிக்கும்,  மாமா.. மாமா என மருகும் அந்த ரஞ்சனியின் நடிப்பு தான். சரி விசயத்துக்கு வருவோம்.

”நீங்கள் கேட்ட பாடல்” நிகழ்ச்சியின் போது “லக முக்கிய கேள்வி”யான உங்களுக்கு பிடித்த நடிகர்/நடிகை யார்? என்ற கேள்விக்குறிய பதிலை முடிந்த அளவுக்கு யூகிக்க பார்ப்பேன். பொதுவாக ஆசிரியராக பணிபுரியும் இளம்பெண்கள் “ஜோதிகாவை” பிடித்த நடிகையாக கூறுவர். ஜெனீபர் டீச்சர் ஏற்படுத்தியளவுக்கு இல்லையென்றாலும், அதற்கு இணையாக இந்த காலத்து டீச்சர்க்குறிய ஒரு தனியடையாளத்தை ஏற்படுத்தியது ஜோதிகாவின் நடிப்பும் அந்த மாயாவின் பாத்திர படைப்பும் என்றால் அது மிகையல்ல.

சரி இப்போவாவது மேட்டருக்கு வருவோம், இந்த பதிவுக்கு காரணமா இருந்தது, ஏகன் படத்தில் வரும் “கிச்சு..கிச்சு.. யாய்..யாய்” என்ற பாடல் தான். படத்தை நான் இன்னும் பாக்ல ( என்னது? தப்பிச்சுட்டேனா?? ). நயன் இப்படத்தில் ஒரு ஆசிரியாராக நடித்திருப்பதாக செவிவழி செய்தி. பாடலின் ஆரம்பம் வகுப்பறையில் செம அலப்பறையாக தொடங்கி, கற்பனையில் விரிகிறது, ஆடையில் குறைகிறது. இதுக்கு முன்னே பானுபிரியா நடிக்க I love you Teacher என்றொரு படம் வந்து அந்த பணிக்குறிய மொத்த இமேஜையும் டேமேஜ் செயத்து. அதை தொடர்ந்து நயனும் அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் போல.. ம்ம்ம் பணம் பத்தும் செய்யும், பாவம் நயன் என்ன செய்வார்.

பி.கு 1: இப்பதிவு நான் ஒரு முற்போக்குவாதி என்று படம் காட்டுவதற்கல்ல, அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அழி ரப்பர் வச்சு இப்பவே அழிச்சுடுங்கோ ( என்ன அழிச்சாச்சா?). நானும் ஒரு ரவுடி தான் என்பதை இங்கு கூவிக்கொ....ச்சே. கூறிக்கொள்கிறேன்

பி.கு 2 : ஒரு கூட்டம் கொலவெறியோட கேட்டுகிட்டதுனால.. நயன்தாரா படம் “முழு மனதுடன்” இங்கே இணைக்கபட்டுள்ளது :)


அயல்நாட்டு மருமகள் 2/08/2009


இஸ்ரேலில் உள்ள மோனா மற்றும் சிரியாவில் பிரபல தொலைகாட்சி நகைச்சுவை நடிகர் டால்லல் திருமணத்தில் இரு நாடுகள் செய்யும் குளறுபடிகளை மிக உணர்வுபூர்வமாக விளக்குகிறது The Syrian Bride. கதையின் போக்கையின் யூகிக்க முடிந்தாலும், கடைசி அரைமணி நேரத்திற்கு நம்மையும் கல்யாண கூட்டத்தோடு சேர்ந்து கவலைப்பட வைத்துவிடுகிறார்கள்.

மணப்பெண் அலங்கரிப்பில் தொடங்குகிறது அமைதியாக கதை,  மணப்பெண் மணமகனை நேரில் பார்த்தது இல்லை,  கல்யாணத்திற்கே மணப்பெண் மட்டும் தனியாக செல்லவேண்டும், உறவினர்/குடும்பத்தினர் யாரும் வர முடியாது. எப்படி இருக்கும் ஒரு பெண்ணுக்கு? உணர்வுகளை கச்சிதமாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருந்தார் மோனாவாக நடித்த Clara. "Do not upset bride on her wedding" என்றொரு மிகப்பிரபலமான அடைமொழி வாக்கியம் உண்டு, ஆனால் இந்த பெண்ணுக்கோ மணநாளே ஒரு போராட்டமாக அமைந்துவிடுகிறது.

இந்த படத்தில் முக்கியமாக எனக்கு பிடித்தது கதாபாத்திரங்களை கையாண்ட விதம். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவமிருந்தது. கல்யாணத்தை படம் பிடிக்கவரும் வீடியோகிராபர் மற்றும் குடியேற்ற துறையில் பணியாற்றும் பெண் உள்பட அனைவரையும் கதையின் ஓட்டத்தினுடே பயணம் செய்த வைத்தவிதம் மிக அருமை. 

அடுத்தபடியாக கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்,  மோனாவின் தந்தை சிரியாவிற்கு ஆதரவான அரசியல் கொள்கை உடையவர். அவரது மகனே ரஷ்ய பெண்ணை மணந்தவர். குடும்பத்தின் மொத்த பொறுப்பையும் தலையில் தூக்கி சுமக்கும் அக்கா கதாபாத்திரம். 

அரசு அதிகாரிகளின் குளறுபடிகளால் தங்கையின் திருமணம் நின்றுவிடுமே என கலவரப்படும் சகோதரி பாசத்தை, அரசியல் காரணங்களுக்காக தங்கையின் திருமண வைபவத்தில் தந்தையின் பங்கேற்பை தடைசெய்யாமலிருக்க செய்யும் போராட்டத்தை,  கண்முன் இருக்கும் கணவனிடம் பேச எதுவுமில்லாமல் கண்காணா இடத்திலிருக்கும் சகோதரனை தொடர்பு கொள்ளும் பாசத்தை, தந்தை-மகனுக்கிடையே உள்ள மனக்கசப்பை கையாள்தல், கணவனின் கையாளாகத தனத்தினால் தனது படிப்பை தொடரமுடியாம வருந்தி நிற்கும் ஒரு அபலை பெண்ணின் நிலையை என பன்முக நடிப்பை பக்காவாக செய்திருந்தார் அக்காவாக நடித்த Hiam Abbass.

இந்த படத்தை பார்க்கும் போது, இதே போல கத்தியின்றி ரத்தமின்றி போரின் கொடூரத்தை நகைச்சுவையோடு பறைசாற்றும் The Life is Beautiful படம் ஞாபகத்தில் வந்து போனது. நம்ம இளைய தளபதி, இந்த படத்தை தமிழ் நாட்டு மக்களும் பார்த்து ரசிப்பதற்கு வாயிலாக இந்த படததின் முதல் பாதியை வரிக்கு வரி இடம்பெயர்த்து ”யூத்” என்ற படத்தை எடுத்தனர்.

இன்னொரு முக்கிய அம்சம் குரவை சத்தம். சந்தோசத்தை வெளிப்படுத்த மக்கள் குரவை இடுகின்றனர். இது நமது தமிழ்நாட்டு மக்களுக்கேயுரிய கலாசாரம் என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். வளைகுடா நாட்டிலும் இந்த பழக்கமிருப்பது ஆச்சர்யத்தை வரவழைத்தது.


இயற்கையை ஜெயிக்க முடியுமா? 2/03/2009


இன்று அலுவலகத்துக்கு போகும் போது நான் கேட்ட பாடலின் ஒரு வரி தான் இந்த பதிவுக்கு காரணம்
நீரோட்டம் இருந்தா,
ஏரோட்டம் நடக்கும்;
ஏரோட்டம் இருந்தா தேரோடும்.
என ஜானகியின் கொஞ்சும் குழந்தை வாய்ஸில் புதுப் பாட்டு என்ற படத்துக்காக இசைஞானியின் இசையில் பாடிய ”இந்த பூமியே எங்க சாமியம்மா” என ஆரம்பிக்கும் அந்த பாட்டுதான்.

நான் ரொம்ப சின்ன பையனா இருக்கும் போது எங்க ஊர்ல இருந்து ஒரு அரை மைல் தூரத்துல இருக்குற ஒரு கிணத்துல இருந்து இடுப்புல ஒன்னு தலையில ஒன்னு’னு தண்ணி கொண்டு வருவாங்க பெண்மக்கள். எனக்கு நல்லா ஞாபகமிருக்கு எங்க அம்மா தண்ணிக்கு போகும் போது நானும் வருவேன்’னு அடம்பிடிச்சு அழுது தூக்கிகிட்டு போக சொல்வேன் ( பொறந்ததுல இருந்தே அப்டி தான்.. ) , போகும் போது பரவாயில்ல இடுப்புல என்னை தூக்கி வச்சுகிட்டு காலி குடத்தை கையில் பிடிச்சுக்குவாங்க. ஆனா வரும்போது தான் பிரச்னையே, என்னை நடக்க சொல்லுவாங்க, முடியாதுன்னே அடம்பண்ணி (கொடுமக்கார பயபுள்ள, இப்போவாவது நம்புங்கப்பா நான் கொடுமைகாரன் தான்...)அழுவேன். அடம்பிடிச்சு காலை கட்டிபிடிச்சு அழுதுகிட்டே தர தர’னு தரையோடு இழுத்துகிட்டே/அழுதுகிட்டே வருவேன், குடத்துல இருந்து சிந்துன தண்ணிய விட என் கண்ணுல இருந்து சிந்துன கண்ணீர் அதிகமாயிருக்கும். 

அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சு வருசம் கழிச்சு ஒரு 90 வாக்குல ஒரு அடி பம்ப் போட்டாங்க, ஊரே திரண்டு நின்னு வேடிக்க பாத்துச்சு. மொத்தமுள்ள 400 பேருக்கும் ஒரே அடி பம்ப் தான். நீங்க நிறைய பேப்பர்ல படிச்சு இருப்பீங்க.. குழாயடி சண்டைய பத்தி. ஆனா அப்படி ஒரு தகராறு எங்க ஊர்ல நடந்ததே இல்ல.. ( இனியும் அப்டியே தொடரணும்’னு தான் ஆசை). எங்களோட மனமகிழ் மன்றமே அந்த குழாயடிக்கு பக்கத்துல இருந்த தெரு விளக்குதான். படிக்குறேன் சொல்லிட்டு எதாவது ஒரு புத்தகத்த எடுத்து காலங்காத்தால ஒரு டைம் குறிச்சு “படிச்சு”ட்டு வருவோம். அப்டியே “வேண்டியவங்களுக்கு” குடம் குடமா தண்ணியடிச்சு குடுத்து எங்க பாசத்த தண்ணியாக கொட்டியிருக்கோம்.. ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.

இருந்த ஒரே அடிபம்பிலேயும் தண்ணீர் பற்றாகுறை வந்தது இல்ல. அது ஒரு வரபிரசாதமா தான் இருந்தது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி, பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு தேவையில்லாத ஒரு இடத்துல இன்னொரு குழாயும் போட்டாய்ங்க.. ஆனா அங்க தண்ணி நல்லா இல்லாததுனால ( முன்னமே தெரியும்.. சும்மா கடனுக்கு/கணக்குக்கு போட்டது தானே ) குடிக்கிறது தவிர மத்த எல்லாத்துக்கும் ரொம்ப நல்லாவே பயன்பட்டுச்சு. அதுக்கு அப்புறம் ஆசை யாரை விட்டது, ஊருக்கு ஒரு த்ண்ணி தொட்டி இல்லை என ஒரு வெட்டி கூட்டம் புலம்ப ஆரம்பிச்சது, அதன் பலனா 2000 வாக்கில் ஒரு தண்ணீர் தொட்டியும் ஒரு 4 பொது குழாயும் போடப்ட்டது. 

அங்க பிடிச்சது தான் வினை, அதுவரைக்கும் சித்திரையில் கூட தண்ணீர் பஞ்சத்தை பாக்காத ஊரு, தண்ணீர் பஞ்சத்த பார்க்க ஆரம்பிச்சது. அரை மைல் நடந்து போய் தண்ணீர் பிடித்து வரும் போது இல்லாத தண்ணீர் பஞ்சம், ஒரு அடி பம்ப் குழாய் இருந்த போது வராத தண்ணீர் பஞ்சம். நாலு குழாய் இருந்த போது எட்டி பார்க்க ஆரம்பிச்சது. இத்தனைக்கு ஜனத்தொகையில் பெரிய மாற்றமெல்லாம் இல்ல. மிஞ்சி போனா இப்போ ஒரு 500 பேர் இருப்பாஙக. ஆனா தண்ணீர் போதவில்லை. 

காரணம் என்னான்னா திறந்த உடனே தண்ணீ வருதா மக்கள் அதன் அருமை தெரியாம, சும்மா புகுந்து விளையாடி இருக்காய்ங்க.. குழாயை திறந்து தண்ணீர் வரலேன்னா, திரும்ப மூடுறதுல்ல, அப்படியே மூடினாலும் சரிவர மூடாததுனால, நிறைய தண்ணீர் வீணா போய்கிட்டு இருந்திருக்கு. 

என்னோட சொந்தகார பயபுள்ள தான் இதுக்கு இன்சார்ஜ், என்னாடா மாப்புள, ”தண்ணீ ஒழுங்கா திறந்து விட மாட்டுறியாம்ல, மக்க தண்ணீ இல்லே’னு சொல்றாய்ங்க” என ஒரு தடவை போட்டு வாங்கும் போது, மனுசன் புலம்பி தள்ளிட்டான். குடிக்கிறதுக்கு பயன்படுற தண்ணிய குளிக்க, மாடு குளிப்பாட்ட, ஹோஸ் போட்டு தோட்டத்துக்கு பாய்ச்ச என மக்கள் ரொம்ப அழிச்சாட்டியம் பண்றாய்ங்கடா.. அப்புறம் எப்படி தண்ணி பத்தும் என்றான். அவன் பேச்சிலும் ஒரு உண்மை இருந்தது.

ஆரம்பத்துல அடி பம்புல் இருந்து க்‌ஷ்டபட்டு தண்ணி எடுத்து வந்ததுனால அதனோட அருமை தெரிஞ்சது. அதை ஒரு செல்வம் மாதிரி பயன்படுத்தினாங்க. சில சமயம் ஆர்வகோளாறுல குடிக்கிற தண்ணிய எடுத்து ஆட்டு மாட்டுக்கு வச்சுட்டு ”வாங்கி கட்டி”யிருக்கேன். கொஞ்சம் கூட வீணாக்கமா பயன்படுத்தியிருக்கோம்.

சமீபத்தில் இதனோட உச்சகட்டமா நாலு குழாய் போதவில்லே’னு, மக்கள் அவங்க வீட்டுக்கொரு குழாய் என ”தனி” யாக அமைத்து கொள்ள ஆரம்பித்தனர். எங்க அப்பாவும் எங்கிட்ட ஒரு ரெண்டு மூனு தடவ ஓதி பாத்தார், நான் காது குடுத்து கேக்கல, அவருக்கு தெரியாதா என்ன? என்னை எப்படி கவுக்கனும்’னு. செண்டிமெண்டா பேசி கவுத்து, எங்க வீட்டுக்கும் “தனி” குழாய் இழுத்தாச்சு.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வீட்டுக்கு போன் பண்ணும் போதெல்லாம், “அம்மா கிட்ட பேசனும் குடுப்பா”  என்றால், ”தண்ணீ பிடிக்க போய்ட்டாடா” என்பார். ”அதான் வீட்டுலேயே குழாய் இருக்கே, பின்னே எங்க போனாங்க’னு விசாரிச்சா.. சரிவர கரண்ட் வராத்துனால, தண்ணிதொட்டியில் தண்ணி நிரப்ப முடியவில்லையாம்.. அதனால ”நோ வாட்டர்”.. அப்போ மறுபடியும் அந்த பழைய அடி பம்ப் குழாயை பயன்படுத்தியிருக்கிறார்கள் நம்ம மின்வெட்டார் புண்ணியத்துல. 

இயற்கையை ஜெயிக்க முடியுமா சொல்லுங்க?