அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

தலைப்பு வைக்க தெர்யலே 1/08/2009


ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடேசியில மனுசன கடிச்ச கதையா. உலக பொருளாதார வீழ்ச்சி, வீடு கட்டுமான துறையில் ஆரம்பித்து, நிதி நிறுவன்ங்கள், கார் தொழிற்சாலை என பரவி, இப்போ உலக அரங்கில் மிக அதிமுக்கியமான துறையும்,  எந்த வித சீதோஷ்ண நிலையிலும் , எவ்வித கால சூழலிலும் துளியும் ஆட்டம் காணாமல், இன, மொழி, தேசம் என எந்த எல்லை கோடுமில்லாமல் என்றும் பசுமையாய் இருந்த ஒரே துறை.

இவ்வளவு ஏன் வயது வித்தியாசமின்றி அனைவரையும் வாடிக்கையாளர்களாய் கொண்டிருக்கும், நேற்றுவரை வீறு நடை போட்டு கொண்டிருந்த தனித்துவமிக்க(?) துறையான "அடல்ட் எண்டர்டெயின்மெண்ட்” ஆட்டம் காண தொடங்கி விட்ட்தாம்.  இந்த துறை சார்ந்த ஒரு நிறுவனம், இனி தொழிலை தொடர்ந்து செய்ய இன்னும் பணம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வேண்டும் என்கின்றனர்.

அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து தள்ளாடிக் கொண்டிருக்கும் “ங்கொய்யாங்கோ” குழுவை காப்பாற்ற வேண்டி எல்லாம் வல்ல பராக் ஓபாமாவை கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இதை படிக்கும்போது எனக்கு ”கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியை தூக்கி நடுமனையில் வை” என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல வேளை ப்ரிண்ட் பண்ண CD எல்லாத்தையும் வித்து/பாத்து குடுங்கனு கேக்காம விட்டாங்க. 

உலக அளவில் ஆசியா தான் இந்த துறையில் முண்ணனி வகிக்கிறது. இப்போ தெரியுதா ஜனத்தொகையில் நாம ஏன் முதல், இரண்டாம் இடத்துல இருக்கோம்னு. ஆனாலும் இந்த துறையின் பாதிப்பே இல்லாமல் அடுத்த ஆறேழு மாசத்தில் ”மின்வெட்டு”வீராசாமியின் புண்ணியத்தில் தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் ஒரு எழுச்சி இருக்கும்.

தொடர்புள்ள செய்தி

தொடர்புள்ள வீடியோ  (செய்தி தொடர்பான வீடியோ தான், சாம்பிள் வீடியோ அல்ல)

பி.கு: எதாவது ஏடாகூடமா தலைப்பு வைச்சு, அதனால் சூடு/பில்டர் ஆகாமல் இருக்க ரொம்ப நேரம் யோசிச்சு வச்ச தலைப்பு.

பொல்லாதவன் 1/07/2009


புத்தாண்டில் நான் பார்த்த முதல் தமிழ் படம் பொல்லாதவன், ஏற்கனவே ஒரு தடவை பார்த்துவிட்டாலும் இரண்டாம் முறை பார்க்கும் போது அவ்வளவாக அலுப்பு தட்டவில்லை. இது ஒன்றே போதும் இந்த படம் பார்க்க கூடிய படம் என்று சொல்ல. நண்பர் கார்த்திக்கின் வற்புறுத்தலுக்கிணங்க இப்படத்தை பற்றிய என்னுடைய விமர்சனம்

படத்தோட பேரை பழைய ரஜினி படத்திலிருந்தும், படத்தின் ஒரு பாடலை ரஜினி/கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்தும், கதையின் முக்கிய கருவை “The Bicycle Thief” படத்திலிருந்து எடுத்தாலும், இப்போதைய கால சூழலுக்கு ஏற்றவாறு காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் சில திருப்பங்களை/மாற்றங்களை செய்து படத்தை வெற்றிபாதையில் செலுத்தி இருக்கிறார் வெற்றிமாறன், அவருக்கு இது முதல் படமாம்.

பான் பாக் ரவி, பட்டாசு பாலு, வட சென்னைக்கு ஒருவன், தென் சென்னைக்கு ஒரு ரவுடி என தனிதனியாக/வரிசையாக பல கோஷ்டிகளை காட்டி பொறுமையை சோதிக்காமல், ஒரே கோஷ்டியில் மூன்று ரவுடிகளைக் காட்டியிருப்பது கொஞ்சம்ஆறுதலாக இருந்தது, மூன்று ரவுடிகள் இருந்தாலும்.. ஆ... ஊ....ஏய்.. என மயிர் கூச்செரியும் அலறல் காட்சிகள் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல்.

அதிலும் டேனியல் பாலாஜியை ஒரு சப்பையாக காண்பித்தாலும், அடி மேல் அடி வாங்கினாலும் கடைசிவரை அவர் காட்டும் ஆக்ரோசம்.. வாவ்.. படத்தின் வெற்றிக்கு ஒரு மிகப்பெரிய காரணம் அவர் எனலாம். ஏற்கனவே ”வேட்டையாடு விளையாடு” வில் வில்லனாக நடித்திருந்தாலும் இதில் நல்ல வித்தியாசம் காண முடிகிறது. விறுவிறுப்பான இந்த படத்தில் கதாநாயகனுக்கு ரெண்டே ரெண்டு சண்டைகள் தான் என்பது ஒரு இன்னொரு ஆறுதலான விசயம்.

அவுட்டு மற்றும் டேனியலின் அண்ணனாக வரும் இன்னொரு வில்லன் இருவரும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக அண்டர்ப்ளே செய்திருந்தனர். மலையாள முரளி ஒரு பொறுப்புள்ள அப்பாவாக நிறைவாக செய்திருந்தார்.

இப்படத்திலும் ஒரு பொம்மையாக/ ஊறுகாயாக வருகிறார் நாயகி ”குத்து”ரம்யா (எ) திவ்யா( இது தான் உண்மையான பெயராமே), ஜோதிகாவின் இடத்தை பிடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை தொப்பையில், முகத்தில் (பால்வடியும்)குழந்தை தோற்றம் இருந்தாலும் மற்ற பாகங்களில் வயதை மீறிய முதிர்ச்சி/கவர்ச்சி. அவ்ளோ பெரிய ஸ்டூல் போட்டு நடக்கும் போதும் தனுஷின் இடும்புக்கும் கொஞ்சம் மேலே இருக்கிறார் உயரத்தில். ”நீயே சொல்” பாடல் காட்சிகளில் இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம், அதற்குரிய வாய்ப்புகள் பாடல் வரிகளில் அதிகமிருந்தன.

பைக் தொலைப்பதற்கு முன்னே எதைப்பற்றியும் கவலையே படாத பொறுப்பற்ற உணர்ச்சியையும், தொலைத்த பின்பு ஒருவித கவலை கலந்த தேடல் உணர்ச்சியையும் கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. இனிமேல் தறுதலையான வேஷமா கூப்பிடு தனுசை என்றாகிவிட்டது. இந்த படத்தின் இறுதி சண்டை காட்சியில் ”அவர் சூடாகி.. நம்மள சுளுக்கு எடுக்காமலிருந்தது” ஆறுதலான விசயம். காதல் காட்சிகளில் தனுசின் வழக்கமான நெருக்கம் மிஸ்ஸிங், யார் மீது என்ன கோபமோ/பயமோ தெரியல, மன்மதன் தான் இதில் வல்லவன் என்று சொல்லும் படி இருந்தது.

பாடல்களில் எனக்கு பிடித்தது ”மின்னல்கள் கூத்தாடும்”, ” நீயே சொல்” , “படிச்சு பார்த்தேன் ஏறவில்லை” . இப்போ எதுக்கு இந்த “அலிபாபா தங்கம்” பாட்டு வந்துச்சு? என்று கேக்க நினைக்கும் போது, பாடல் முடிந்தவுடன், ”பொறந்த நாளு அதுவுமா” என்றொரு வசனத்தில் தெரிந்தது இயக்குனரின் சாமர்த்தியம்.

”நீயே சொல்” பாடலில் இசையும் பாடல் வரிகளும் அருமை. பாடலுக்கு முன் அந்த ஹம்மிங் அதை ஒற்றிய (salsa /belly நடனத்திற்குரிய இசை என்று நினைக்கிறேன்) இசையும் பல முறை கேட்க தூண்டும் வசீகரம். வரிகளில் எனக்கு பிடித்த சில.. 

நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா?
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா அடங்குமா?

பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் சில இடங்களில் விதைகள் கிடையாது (
இந்த வரி எனக்கு புரியவில்லை, இருப்பினும் ரொம்ப பிடித்திருந்த்து)

போர்வைக்குள் பூப்பூக்க வைக்க வா.. வா..
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா.. வா.

மரியாதை தெரியாத முத்தம் தா. தா.
கட்டில் மேல் என்ன பண்பாடு காதலா? காதல் வேர் தொடு.. தொடு..

பேசாம படத்துக்கு ”மச்சி நீ கேளேன்” என்றே பெயர் வச்சிருக்கலாம் அந்தளவுக்கு செம காமெடியா இருந்த்து கருணாஸின் அந்த ஒரு வரிக் காமெடி. அதையும் அலுப்பு தட்டாமல் அளவோடு செய்திருந்தனர்.  
“அவர் சொன்னதை அவர்கிட்டேயே.. ’நீ கேளேங்கிறியே’ வெக்கமாயில்ல”
“சார் உங்க பெருந்தன்மை எனக்கு புரியுது, இருந்தாலும் அதெப்படி சார் ஒரே ரூம்ல“
“டீக்கடை பையன் சக்கரை அளவை சோதிப்பது”
என டைமிங் காமெடிகள் தனி பிட்டாக இல்லாமல் கதையோட்ட்த்துடன் வலம் வருவது ரசிக்கும் படி இருந்த்து.

பொல்லாதவன் – படம் பார்ப்பவர்களுக்கு அல்ல


சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven) 1/05/2009




தனது கவனகுறைவால் தங்கையின் ஷுவை தொலைத்துவிடுகிறான் அலி. வீட்டின் வறுமையை உணர்ந்து பெற்றோரிடம் இதை பற்றி தெரிவிக்காமல் அண்ணன் – தங்கை இருவரும் எப்படியெல்லாம் சமாளிக்கிறார்கள்? அவர்களுக்கு ஷு கிடைத்த்தா? என்பதை பாசம், கோபம், வெறுப்பு, தியாகம், நேர்மை, நகைச்சுவை, வெற்றி, இழப்பு, தோல்வி, ஆறுதல், துப்பறிதல், வறுமை, திறமை என பலவிதமான உணர்வுகளுடன் மிக மிக இயல்பாக எந்தவிதமான சினிமாத்தனமும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யும் ஈரான் நாட்டு பெர்சியன் மொழிப் படம் தான் இந்த குழந்தைகளின் சொர்க்கம். பொதுவாக சில கலைபடங்களை உக்காந்து பாக்க முடியாது, அந்த மாதிரியெல்லாம் கொடுமை படுத்தாமல் மிக அழகாக இருக்கிறது இந்த சொர்க்கத்தின் குழந்தைகள் 

தியாகம்/நேர்மை
தனது ஷுவை இன்னொரு பெண் அணிந்திருப்பதை பார்த்து, அவளது வீடுவரை பின்தொடர்ந்து சென்று துப்பறிதல், பின்பு தன் அண்ணனை துணைக்கு அழைத்து கொண்டு அந்த ஷுவை வாங்க செல்ல, பின் அவளது குடும்ப சூழல் தெரிந்து கேட்காமலே திரும்பி வருதல் என அந்த பெண் குழந்தை மிக அருமையாக நடித்து இருக்கிறார். பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கிறார். இந்த காட்சிகளில் எல்லாம் வசனங்களே கிடையாது. அவர்களின் முகபாவங்கள் தான் வசனமே. 

நேர்மை/உதவி
”நான் அலுவலகத்தில் எல்லாருக்கும் தேனீர் தயாரித்து தந்தாலும் என் மகள் எனக்கு தரும் தேனீர் சுவையே தனி”  என சர்க்கரை கட்டியை உதிரியாக்கி கொண்டே, சர்க்கரை எடுத்து கொண்டுவா என்கிறார். ”இங்கே தான் இவ்ளோ சக்கரை இருக்கே இதுல கொஞ்சம் எடுத்துக்க்லாம்ல” என்கிறார் அந்த குழந்தை அப்பாவியாக. இது நமக்கு சொந்தமல்ல, அடுத்தவரின் பொருள் என நேர்மையை விளக்குவது அருமை. குழந்தைகள் சிறுவயதிலும் குடும்பச் சூழலை அறிந்து அனைத்து குடும்ப வேலைகளிலும் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் கலாசாரத்தை விளக்கும் நல்லதொரு காட்சி அது. 

இழப்பு/வெறுப்பு/பாசம்
ஷுவை தொலத்துவிட்டு சோகத்துடன் தன் தங்கையிடம் தெரிவிப்பது, தன்னை தொடர் ஓட்ட போட்டியில் சேர்த்துக் கொள்ள சொல்லி ஆசிரியரிடம் வற்புறுத்துவது, வேலையில் தன் தந்தைக்கு உதவுவது, தனக்கு பரிசாக கிடைத்த பேனாவை தங்கைக்கு கொடுப்பது, முதியோர்களை மதிக்கும் பாங்கு, என படம் முழுவதும் அலியாக நடித்த அந்த சிறுவன் பின்னி பெடல் எடுத்துள்ளான்.

திறமை/ஆறுதல்
ஒரே ஷுவை அண்ணன் தங்கை இருவரும் மாற்றி மாற்றி அணிந்து வருவதால், அலி பள்ளிக்கு தாமதமாக வர நேரிடுகிறது. ஒருமுறை கண்டிக்கும் தலைமை ஆசிரியர் மறுமுறை அவனை “அப்பாவை அழைத்து வர சொல்கிறார்”, அவனோ வருத்த்துடன், “அவர் இன்று வேலையில் இருப்பார்” என்கிறார். அப்போ நாளைக்கு அழைத்து வா என்கிறார். “நாளைக்கும் வேலையில் இருப்பார்” என்கிறார் அப்பாவியாக.”அப்போ உன் அம்மாவை அழைத்து வா” என்கிறார். பதிலுக்கு “அவருக்கு உடம்பு சரியில்லை” என்கிறான். கடுப்பான ஆசிரியர் ”பெற்றோருடன் வந்தால் வா, இல்லையேல் வராதே” என்று கண்டித்து வெளியனுப்புகிறார். 

கண்களில் நீர் திரண்டு வர, மிரண்டு போய், தன்னை கண்டிக்கும் தலைமை ஆசிரியரிடம் பிரதிவாதம் செய்யும் அந்த ஓர் காட்சி மிகவும் உணர்ச்சிமயமானது. பின்னர் அங்கு வரும் அவனின் வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியரிடம் அவனுக்கு ஆறுதலாக அவனின் நன்னடத்தையையும் திறமையையும் எடுத்து சொல்லி அவனை வகுப்பில் அனுமதிக்க சிபாரிசும் செய்கிறார்.

பாசம்/வெற்றி
தொடர் ஓட்டத்தில் மூன்றாவதாக வருபவருக்கு ஷு பரிசு என்பதை கேள்வி பட்டு, வேண்டுமென்றே மூன்றாவதாக வர அவன் செய்யும் சாமர்த்தியமும், போட்டி முடிந்து மயங்கிய அவனை ஆசிரியர் தெளிவுபடுத்தியவுடன் ” சார் நான் மூனாவதா வந்த்துட்டேனா?” என கேட்கும் காட்சியும் கல் நெஞ்சுக்காரர்களையும் கரைய வைக்கும் உருக்கமான ஒரு காட்சி.

என் நண்பரின் வீட்டுக்கு புத்தாண்டை கொண்டாட சென்றிருந்த போது இப்பட்த்தை எடுத்துகொண்டு போனேன், நேரம் கிடைத்தால் பார்க்கலாம் என்று. நண்பருக்கு இரண்டரை வயதில் ஒரு பையன் இருக்கிறான்.  பையன் சுட்டியாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல அவனை “Good Boy”  என்று பாராட்டினேன். அதற்கு நண்பரின் மனைவி, “Good Boy”-னு சொல்லாதீங்க, “Good Job”-னு சொல்லுங்க என்றார். ஏன்னா, எல்லா குழந்தைகளுமே நல்ல குழ்ந்தைகள் தான் அவர் செய்யும் செயல்கள் தவறாகவோ, சரியாகவோ இருக்குமே தவிர, அவர்களல்ல என்றார் முத்தாய்ப்பாக. அவர் சொன்ன கருத்தை மிக துல்லியமாக/நேர்த்தியாக விவரிக்கிறது இப்படம்.

ஒவ்வொரு காட்சியிலும் கேமிராவை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து படம் பிடித்தது போல இருந்த்து அனைவரின் இயல்பான நடிப்பும் கதையின் போக்கும். சின்ன குழந்தைகளின் பிறந்த நாளுக்கு இது மாதிரியான படங்களை பரிசாக குடுக்கலாம். 


நீங்க நல்லா இருக்கோணும்!!! 1/04/2009



”இல்ல சார், இதுக்கு முந்தின குதிரை எடுப்பு திருவிழாவுக்கு அடுத்து வந்த ஆனி மாசம் தான் பிறந்தா”

”அப்படியே வைச்சாலும் பிள்ளைக்கு மூனு முடிஞ்சு நாலு வயசு ஆரம்பிக்க போகுது.”

”அஞ்சு வருசம் ஆயிடுச்சுனுல்ல நெனச்சுகிட்டு இருக்கேன், மூனு வருசத்துக்கு முன்னாடி தான் சாமி கும்பிட்டோமா?”,

“ஆமா, இந்த வருஷம் சின்ன/ஆயா (Nursary School) பள்ளிக்கூடத்துல கொண்டு போய் விடுங்க, அடுத்த வருஷம் இங்கே சேர்த்துக்கலாம்”.

----------

ஏம்பா கந்தா, “பையனுக்கு சிலேடும், வாய்ப்பாடும் வாங்கி குடுக்கச் சொன்னெனே. என்னாச்சு”

கூச்சம் கலந்த தயக்கத்துடன், “நாளைக்கு மீன் வித்தவுடனே மொத வேல அதான் சார்”

----------

”என்ன சின்னா, சேர்க்கை முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சே. இப்போ பையன கூட்டிட்டு வர்ற?”

“அது வந்து சார், வாத்து மேய்ச்சலுக்கு கூடலூர் கம்பம் போனது தால, வரமுடியாம போய்டுச்சுங்க, நீங்க தான் பெரிய மனசு பண்ணி சேத்துக்கணும்”


----------
”இங்கிலீஷ்க்கு எந்த மாசம்யா?”

“தெரியலேயே சார், தமிழுக்கு மார்கழி மாசம் பொறந்தான்”

“சரி எந்த தேதி?”

”மார்கழி கடேசியில, பொங்கலுக்கு பத்து நாளுக்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை சார்”

“அப்போ தேதியும் தெரியாது.. சரி எந்த வருஷம்?”

“நம்ம கடைக்காரவுக வீடு கட்டி முடிச்ச வருசம் சார்”

“சரி தான்.. “

“டேய் இங்க வா.. உன் வலது கைய தலைக்கு மேல கொண்டு வந்து இடது காதை தொடு பார்க்கலாம்” தொட்டேன்

“சரி சேத்துக்கலாம்”

வீட்டில்

”என்னங்க நான் தான் படிச்சு படிச்சு சொல்லி அனுப்பிச்சேன்ல இங்கிலீஷ்க்கு ஜனவரி மாசம் நாலாம் தேதி-னு இங்க ஜூன் –னு போட்டிருக்கு?”


மக்களின் கல்லாமையையும் அறியாமையயும் புரிந்து கொண்டு; அனைவரையும் அரவணைத்து இன்முகத்துடன் கல்விச் சேவை புரிந்த என்னுடைய இரண்டாம் ஆசான் ஆ.கருப்பையா அவர்களை பொங்கலுக்கு பத்து நாளுக்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை
(இன்று) பிறந்த நான் வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறேன். நீங்க நல்லா இருக்கோணும்!




புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் தீர்மானங்களும் 12/31/2008

சமீபத்தில் வேலை முடிந்து ஆழ்வார்பேட்டையிலிருந்து குரோம்பேட்டைக்கு பேருந்தில் வரும்போது, பல்லாவரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த பேச்சாளர் ஒருவர், “ஈராக் போரைக் கண்டித்து, புஷ்ஷை எதிர்த்து” ஆக்ரோஷமாக பேசி தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். மேடையில் இருந்ததில் ஐந்தில் ஒரு பங்குதான் மேடை முன் அமர்ந்து அவர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தனர். மேடையில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர்.

புஷ்ஷை எதிர்த்து, மன்மோகன்சிங் தீர்மானம் நிறைவேற்றினால் கூட அதை அவர் கண்டுக்க மாட்டார். அவ்வளவு ஏன் ”ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அவர் பேச்ச அவரே கேக்க மாட்டார்” அப்படிப்பட்ட மனுசன் புஷ். இவ்வளவு இருந்தும்/தெரிந்தும் அந்த மனிதர், தொண்டை நரம்புகள் புடைக்க அனல் தெரிக்க பேசி காமெடி பண்ணிக்கொண்டிருந்தார். ”தீர்மானம்” என்றவுடனே எனக்கு ஏனோ அந்த பேச்சாளர் நினைவில் வந்து போகிறார்.

என் நண்பர் ஒருவரிடம், இந்த வருடம் உங்களுடைய தீர்மானம்(Resolution) என்ன? என்று கேட்க, அவரோ, “இனிமேல் எந்த தீர்மானமும் எடுக்க கூடாது என தீர்மானம் எடுக்கப் போறேன்” என்றார் நக்கலாக. அப்படி இல்லாம எதாவது ஒரு தீர்மானம் எடுத்து, அதை நிறைவேற்ற முயற்சி செய்றது நம்ம வழக்கம்.


இந்த வருடத்திற்கான என்னுடைய தீர்மானங்கள்:

1. நாளுக்கு ஒருவரை சிரிக்க (சிரிப்பாய் சிரிக்க அல்ல) வைக்கோனும்
2. வாரத்திற்கு ஒரு பதிவாவது (மொக்கையாவது) போடோனும்
3. மாதத்திற்கு ஒரு புத்தகம் (கத பொஸ்தகம் அல்ல) படிக்கோனும்.
4. வருடத்திற்கு நண்பர்களின் எண்ணிக்கையை ஒரு மடங்கு அதிகரிக்கோனும்.



Last but not least
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மார்பக பரிசோதனை செய்து கொள்ளளுங்கள்( இது பெண்களுக்கு ). ஆண்கள் தமது குடும்பத்திலுள்ள பெண்களை இந்த பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்துங்கள்.(புத்தி சொல்றாராம்)

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.